வன்முறைகளில் ஈடுபடுவோரை பாதுகாக்க முடியாது: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 24-11-2022 | 7:09 PM

Colombo (News 1st) மனித உரிமைகள் என்று கூறிக்கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவோரை பாதுகாக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது ஜனாதிபதி உரையாற்றினார்.

அராஜகம், வன்முறைகளால் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

அரசாங்கத்தைக் கவிழ்க்க முயலும்போதும் தேரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போதும் இராணுவத்தினருக்கு அதனை தடுப்பதற்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது என ஜனாதிபதி கூறினார். 

பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, வசந்த முதலிகே 11 வருடங்களாக பல்கலைக்கழகத்தில் இருப்பதாகவும் அவருக்கு தற்போது 31 வயதாவதாகவும் சுட்டிக்காட்டினார். 

மனித உரிமையை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கும் உள்ளது.  அராஜகம், வன்முறை என்பன மனித உரிமைகளில் அடங்குவதில்லை.  அது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரான செயற்பாடுகள். மனித உரிமைகளை பயன்படுத்தி வன்முறைகளையும், அராஜத்தையும் மேற்கொள்ள முடியாது

என ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.