துமிந்த விடுதலை: கோட்டாபயவிடம் விளக்கம் கோரல்

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோட்டாபயவிற்கு அறிவித்தல்

by Staff Writer 24-11-2022 | 2:10 PM

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

இது தொடர்பான அடிப்படை உரிமை மனு யசந்த கோதாகொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர் குழாமும் ஏகமனதாக அங்கீகரித்திருந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் ஊடாக அவரை விடுவிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேற்கொண்ட தீர்மானத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி, மகள் மற்றும் சட்டத்தரணி ஒருவர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதியரசர்கள் குழாத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.