.webp)
Colombo (News 1st) கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஜெர்மனி- ஜப்பான் இடையிலான போட்டியைக் காணச்சென்ற ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
போட்டியின்போது ரசிகர்கள் போட்டுவிட்டுச் சென்ற பதாகைகள், உணவுத் தட்டுகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட குப்பைகளை ஜப்பான் ரசிகர்கள் அகற்றியுள்ளனர்.
ஜப்பானியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கத்தாரில் நடந்து வரும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று E பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின.
கலிபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணியின் முன்கள வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்.
இதற்கு பதில் கோல் திருப்ப ஜப்பான் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என்ற கனக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இரண்டாவது பாதியில் ஜெர்மனியே ஜெயிக்கும் என நினைத்து கொண்டிருந்த வேளையில், ரிஸ்து டோன் 75 ஆவது நிமிடத்திலும் டகுமா ஆசானோ 83 ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதற்கு பதில் கோல் திருப்ப ஜெர்மனி எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. முடிவில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது.