.webp)
Colombo (News 1st) உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் கமரூன் அணிக்கு எதிரான போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றியீட்டியது.
G குழுவிற்கான இந்த போட்டி கட்டாரின் அல் ஜனாவூப் மைதானத்தில் நடைபெற்றது.
30,000-இற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியின் போது, கமரூன் அணியின் நட்சத்திர வீரரான ரொஜர் மிலாவுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க போராடிய போதிலும் அந்த முயற்சி கைகூடவில்லை.
எனினும், இரண்டாம் பாதி ஆரம்பமாகி மூன்றாவது நிமிடத்தின் போது சுவிட்சர்லாந்து அணியின் பிரில் எம்போலோ அபாரமான கோலொன்றை போட்டார்.
இரண்டாம் பாதியில் கமரூன் அணி வீரர்களால் கோல் போட முடியாமல் போனதுடன், போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இதனிடையே, உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் போர்த்துக்கல் - கானா அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இரண்டு போட்டிகளில் விளையாட கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தடை விதிக்கப்பட்டமையினால், அவர் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.