மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொலை

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு; மினுவாங்கொடையில் இருவர் கொலை

by Bella Dalima 18-11-2022 | 3:21 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றசெயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய உரகஹ இந்திக்கவின் சகாக்கள் இருவர் மினுவாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி உரகஹா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, நவம்பர் 19 ஆம் திகதி யக்கலமுல்ல பகுதியில் 04 வயது குழந்தையும் அவரது தந்தையும் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியையும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் பரஸ்பர துப்பாகி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த சந்தேகநபர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவர்கள் போத்தல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளும் ரம்போ ரக கத்தியும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சிறு காயங்களுக்குள்ளான விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.