உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

by Bella Dalima 15-11-2022 | 7:28 PM

Colombo (News 1st) உரிய காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி தரப்பினர், தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் பேரவை, உத்தர லங்கா கூட்டமைப்பு, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயேட்சை பாராளுமன்றக் குழு, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, புதிய சமசமாஜக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்றிருந்தன. 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அடங்கலாக 21 கட்சிகள் மற்றும் அமைப்புகள் உரிய காலத்திற்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த கோரிக்கைக்கு பதில் கிடைக்காவிட்டால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தாமதப்படுத்துவதாகக் கருதவேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஏனைய செய்திகள்