நாகரிகமற்ற பொலிஸ் அதிகாரி தொடர்பாக விசாரணை

நாகரிகமற்ற பொலிஸ் அதிகாரி தொடர்பாக அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு

by Staff Writer 14-11-2022 | 12:46 PM

Colombo (News 1st) பொலிஸ் அதிகாரி ஒருவர் நாகரிகமற்ற விதத்தில் செயற்பட்டு 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியமை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இன்றைய நாளுக்குள் அந்த அறிக்கை கிடைக்குமென எதிர்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். 

அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரால் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து தனியான விசாரணை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் போது தண்டனை விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்தும் நீக்கப்படுவார் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ குறிப்பிட்டார். 

சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டரின் செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். 

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை கொரகாபொல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பதாகையுடன் நடந்துவந்த 2 பெண்களை கைது செய்யுமாறு அழுத்தம் விடுத்த குறித்த பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கழுத்தை நசுக்கி பிடித்து நாகரிகமற்ற முறையில் செயற்பட்டிருந்தார்.