நளினி உள்ளிட்ட அறுவர் விடுவிப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுவிப்பு, சாந்தன் நாடு திரும்புவதில் சிக்கல்

by Bella Dalima 12-11-2022 | 6:00 PM

Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 

இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பிணையில் விடுவிக்கப்பட்டு தனது தாயாருடன் தங்கியுள்ளார்.

நேற்று விடுதலை குறித்து அறிவிக்கப்பட்டதும், நளினியின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திடுவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை நிறைவு செய்து 31 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் இருந்து நளினி விடுதலையானார்.

தனது மகள் விடுதலையாகி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நளினியின் தாயார் பத்மா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நளினியை தொடர்ந்து முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்து விடுதலை ஆகியுள்ளனர்.

சாந்தன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவரை விடுதலை செய்தாலும் இந்தியாவில் எங்காவது அவர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அவர் உடனடியாக நாடு திரும்புவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, இந்த 6 பேரின் விவகாரத்திலும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆா். கவாய் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.