2023 முதல் பொருளாதாரம் மீட்சியை நோக்கி பயணிக்கும்

2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கி பயணிக்கும்: மத்திய வங்கி

by Bella Dalima 10-11-2022 | 9:01 PM

Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கி பயணிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பொருளாதார சீர்திருத்தங்களை கருத்திற்கொண்டு மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அரசியல், தேர்தல் செயல்முறைகள் தொடர்பான மாற்றங்களின் விளைவுகள் இல்லாமல் இந்த நோக்கத்திற்காக  அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. 

அண்மைய பொருளாதார போக்குகளை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை இதுவரை பதிவு செய்யப்படாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID பெருந்தொற்றுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மீண்டும் குறைவடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பின்பற்றப்படும் கொள்கைகளால் நாணய மாற்று விகிதத்தை ஸ்திரப்படுத்துதல், வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம் , சுற்றுலாத்துறையின் வருமானம் என்பன தற்போது ஓரளவு முன்னேற்றம் அடைந்து வருவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.