கெய்ரோவில் காலநிலை செழிப்பு திட்டத்தை வௌியிட்ட ஜனாதிபதி; பொருளாதார வளர்ச்சியை வழங்கும் என எதிர்பார்ப்பு

by Bella Dalima 09-11-2022 | 7:42 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவாவை (Kristalina Georgieva)நேற்று (08) எகிப்தில் சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவாவை சந்தித்துள்ளார்.

இதன்போது, கானாவின் நிதி அமைச்சர் Ken Ofori-Atta மற்றும் மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இருந்தனர். 

இந்த சந்திப்பில் கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கெய்ரோவில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலநிலை செழிப்பு திட்டத்தை வௌியிட்டதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகரும் மாலைத்தீவு சபாநாயகருமான மொஹமட் நஷீட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பங்களாதேஷ், கானா மற்றும் மாலைத்தீவுகளுடன் இணைந்து ஜனாதிபதி இந்த திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்டம் வருடத்திற்கு 1% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் விளைவாக 2050 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34% அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.