மாத்தறை துப்பாக்கிச்சூடு: SI-க்கு விளக்கமறியல்

மாத்தறையில் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு: உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 29-10-2022 | 8:23 PM

Colombo (News 1st) மாத்தறை - திஹகொடயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுவன் நேற்றிரவு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்,  மாத்தறை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திஹகொட, மிதெல்லவல குறுக்கு வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சிறுவன் உள்ளிட்ட 6 பேர் விகாரையொன்றில் இடம்பெறவிருந்த பெரஹெரவில் பங்குகொள்வதற்காக மயிலிறகுகள் சேகரிக்கும் நோக்கில் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றினை மேற்கொள்வதற்காக சென்றிருந்த திஹகொட பொலிஸ் அதிகாரிகள் மூவர் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்டபடுத்திய போது, அங்கிருந்த மூன்று சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், அந்த நேரம் பின்னால் இருந்த 15 வயதுடைய ஹரேஷ் ஹங்சக தேஷாந்த எனும் சிறுவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு பிரதேசவாசிகள் திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கூடியதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. 

குறித்த இடத்திற்கு  தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சென்றிருந்தார்.
 
பொலிஸ் தரப்பில் தவறு இடம்பெற்றிருப்பின், நியாயம் பெற்றுத் தருவதாக அவர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். 

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட 57 வயதான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர், மாத்தறை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

ஏனைய செய்திகள்