.webp)
Colombo (News 1st) யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் அவர்கள் பயணித்த வாகனங்களையும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் எந்தவொரு சரணாலயத்திற்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், வனஜீவராசிகள், வனவள பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் யால சரணாலயத்தில் 40 ஜீப்களில் பிரவேசித்த குழுவினர் சரணாலயத்திலுள்ள விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதுடன், சரணாலயத்தின் விதிகளை மீறி செயற்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
இவர்கள் கடந்த சனிக்கிழமை யால சரணாலயத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தலைமையில் இன்று மாலை கலந்துரையாடலொன்று நடைபெற்றதுடன், இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும் வாகனங்களையும் விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்கள், நபர்களின் தகவல்களுக்கு மேலதிகமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காட்சிகள், படங்களுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வழிகாட்டியும் அதிகாரிகள் சிலரும் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனத்தை செலுத்தியவர்கள் எந்த தராதரத்தில் இருந்தாலும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அது தொடர்பில் பொலிஸ்மா அதிபரை தௌிவுபடுத்துமாறும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.