22 திருத்தத்தில் உள்ள மாற்றங்கள் எவை?

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

by Bella Dalima 22-10-2022 | 8:37 PM

Colombo (News 1st) 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று (21) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கருதப்படுகிறது.

எனவே,  22 ஆம் திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தமாகவே அரசியலமைப்பில் உள்வாங்கப்படுகிறது.

இந்த திருத்தத்திற்கு எவ்வாறு வாக்களிக்கப்பட்டது?

இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது இதற்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின்  பின்னரான வாக்கெடுப்பின்  ​போது 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஶ்ரீலங்கா பொதுஜக பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே எதிராக வாக்களித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த திருத்தத்திற்கு வாக்களிக்காதவர்கள் யார்?

44 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 

மஹிந்த ராஜபக்ஸ
பிரசன்ன ரணதுங்க
மஹிந்த அமரவீர
பிரமித்த பண்டார
சனத் நிசாந்த 
சிறிபால கம்லத்
அநுராத ஜயரத்ன 
சீதா அரம்பேபொல
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
பவித்ரா வன்னியாராச்சி
காமினி லொகுகே
ஜனக பண்டார தென்னகோன்
எஸ்.எம்.சந்திரசேன
ரோஹித அபேகுணவர்தன
விமலவீர திசாநாயக்க
தம்மிக பெரேரா 
எஸ்.எம்.எம். முஷாரப்
ஜயந்த கெடகொட
பிரதீப் உதுகொட
சஞ்ஜீவ எதிரிமான்ன
நாலக பண்டார கொட்டிகொட
நிபுண ரணவக்க 
சஹன் பிரதீப்
சாகர காரியவசம்
ரஞ்சித் பண்டார 
ஜயந்த வீரசிங்க 

ஆகியோர் வாக்களிப்பு நடைபெற்ற போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

வாக்கெடுப்பு நடைபெற்ற போது  ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

ஹேஷா விதானகே 
ஹெக்டர் அப்புஹாமி
வடிவேல் சுரேஷ்
வேலு குமார் 
அப்துல் ஹலீம் 

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாக்களிப்பில் பங்குபற்றியிருக்கவில்லை

இரா.சம்பந்தன் 
எம்.ஏ.சுமந்திரன்
இரா.சாணக்கியன்
எஸ்.நோகராதலிங்கம் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து  பிரிந்து சுயாதீனமாக  செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை

ஜி.எல்.பீரிஸ் 
உபுல் கலபதி 
திஸ்ஸ விதாரண 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

அங்கஜன் இராமநாதன் 
சான் விஜயலால் டி சில்வா

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர்.

புதிய திருத்தத்தில் உள்ள மாற்றங்கள் 

குறித்த அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின்  நியமன அதிகாரத்தை நீக்கி, அரசியலமைப்பு சபையை அதனுடன் இணைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்போதுள்ள ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட்டு இந்த திருத்தத்தின் பின்னர் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த திருத்தத்தின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமை இல்லாதொழிக்கப்படுவதுடன், தற்போது பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு உறுப்புரிமை இல்லாமலாக்கப்படும். 

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில்  இந்த திருத்தச் சட்டம் உருவாகியுள்ளது.

அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்கு இன்று திருத்தங்கள்  மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.