தேர்தலை பிற்போடும் அரசின் தீர்மானத்திற்கு எதிராக பிரகடனம்; கட்சிகள் பல கைச்சாத்து

by Bella Dalima 20-10-2022 | 7:28 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒன்றிணைந்த பிரகடனத்தில் கைச்சாத்திடம் நடவடிக்கை பாராளுமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, 43 ஆவது படையணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிவித்துரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நவ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, விஜயதரணி மக்கள் சபை, முன்னிலை சோசலிசக் கட்சி, உத்தர சபை உள்ளிட்ட கட்சிகள் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

தேர்தல் மறுசீரமைப்பு என்ற போர்வையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால்,  அதற்கு எதிராக தனியான கட்சி அல்லது ஒன்றிணைந்த ரீதியில் எதிர்ப்பு வௌியிடப்படும் என குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரகடனத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்துள்ளது.