.webp)
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சமூக செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
லலித் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 ஆம் ஆண்டு யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணாமற்போனமை தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸவை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புவதற்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் முறைப்பாட்டாளர் தரப்பிற்கு அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், அவர் தற்போது மிரிஹான வீட்டிலிருந்து வௌியேறியதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்பது அறியக்கிடைத்துள்ளதாகவும் , அவர் தற்போது தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள வீட்டிற்கு சென்று அறிவித்தலை கையளிப்பதற்கு அனுமதி வழங்குமாறும் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவன் போபகே உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்த வேண்டுகோளை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, யசந்த கோதாகொட,
A.H.M.D.நவாஸ் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அதற்கான அனுமதியை வழங்கியது.