.webp)
Colombo (News 1st) அடுத்த மாத இறுதிக்குள் 2022 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர்களால் தமது பரீட்சார்த்திகள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டவுடன், பெறுபேறுகள் வௌியிடப்படுமெனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
COVID-19 பெருந்தொற்று காரணமாக அடையாள அட்டை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டமையால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பித்து பரீட்சைக்கு தோற்றுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடையாள அட்டையை சமர்ப்பித்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய, பெறுபேறுகள் வௌியிடப்படும் என கூறினார்.
இதனால் பரீட்சார்த்திகள் தேவையற்ற வகையில் அச்சமடைய அவசியம் இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.