விண்கற்களால் இனி பூமிக்கு ஆபத்தில்லை

விண்கற்களால் இனி பூமிக்கு ஆபத்தில்லை: வெற்றியளித்தது நாசாவின் DART திட்டம்

by Bella Dalima 12-10-2022 | 4:03 PM

 Colombo (News 1st) கடந்த செப்டம்பர் மாதம் நாசா மேற்கொண்ட DART (Double Asteroid Redirection Test)திட்டம் வெற்றியளித்துள்ளது. 

விண்கல் மீது செயற்கைக்கோளை மோத வைத்து நாசா சோதனை நடத்தியது. 

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வீழ்ந்த விண்கற்களால் டைனோசர் இனம் அழிந்து, மலைகள் வெடித்து சிதறியதுடன், சுனாமி போன்ற பேரழிவுகளை பூமி சந்தித்தது.

தற்போது பூமிக்கு உடனடியாக எந்த விண்கல்லினாலும் ஆபத்து இல்லை என்றாலும், எதிா்காலத்தில் அத்தகைய அபாயம் ஏற்படும் நிலையில், அந்த கற்களிலிருந்து பூமியைக் காப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்காக, விண்கல் ஒன்றின் மீது வேண்டுமென்றே மோதி அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதற்காக  DART என்ற செயற்கைக்கோள் ஒன்றை SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் கடந்த 2021 நவம்பர் மாதம் நாசா விண்ணில் ஏவியது.

இந்த  DART செயற்கைக்கோளானது பூமியிலிருந்து சுமார் 63 இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ள 2,500 அடி விட்டம் கொண்ட விண்கல்லைச் சுற்றி வரும் ‘டிமாா்ஃபாஸ்’ என்ற குட்டி நிலவு விண்கல்லைக் குறிவைத்து செலுத்தப்பட்டது.

நாசாவின் திட்டத்தின்படி, ராக்கெட்டிலிருந்து பிரிந்த  DART செயற்கைக்கோள் சரியான பாதையில் பயணம் செய்து டிமாா்ஃபாஸ் விண்கல்லின் மையப்பகுதியை செப்டம்பர் 27 ஆம் திகதி துல்லியமாக தாக்கியது.

இந்நிலையில், 15 நாட்களுக்கு பிறகு செயற்கைக்கோள் தாக்கிய டிமாா்ஃபாஸ் விண்கல் தனது பாதையை மாற்றியுள்ளதால், நாசாவின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் DART விண்கலம் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கல்லை விண்ணிலேயே துல்லியமாக தாக்கி அதன் பாதையை மாற்ற முடியும்.