.webp)
Colombo (News 1st) ஐந்து மாதங்களின் பின்னர் ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் (Aeroflot) விமான நிறுவனம் இன்று(09) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கின்றது.
அதற்கிணங்க, இந்த விமான நிறுவனம் வாராந்தம் 2 நாட்களுக்கு இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவிற்கமைய ரஷ்யாவின் Aeroflot நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த சம்பவத்தின் பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் கொழும்பிற்கான விமான சேவைகளை நிறுத்துவதற்கு அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தால் கடந்த ஜுன் 02ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அயர்லாந்திலுள்ள Celestial Aviation Trading Limited என்ற நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆராய்ந்து, குறித்த விமானத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதுவரை அழைத்து அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு அதிருப்தியை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.