கைக்குழந்தையுடன் மணல் திட்டில் இரண்டு நாட்களாக தவித்த இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்பு

by Bella Dalima 07-10-2022 | 7:59 PM

Colombo (News 1st) ஆறு மாத கைக்குழந்தையுடன் 5 இலங்கையர்கள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் கடந்த இரண்டு நாட்களாக தவித்துக்கொண்டிருந்த நிலையில், தமிழக கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

மன்னாரை சேர்ந்த ஒருவரே தனது குடும்பத்துடன் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 174 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.