வட மாகாணத்தில் AIDS நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Bella Dalima 30-09-2022 | 7:41 PM

Colombo (News 1st) இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் வட மாகாணத்தில் எயிட்ஸ் (AIDS) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாலியல் நோய் மற்றும் HIV தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் குறிப்பிட்டார். 

அதிகரித்த போதைப்பொருள் பாவனையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றென வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் சுட்டிக்காட்டினார். 

இதனிடையே, மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 11 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் பல சவால்கள் நிலவுவதாக அவர் தெரிவித்தார். 

நாட்டில் நிலவும் நெருக்கடியினால், உரிய மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொடர்பிலான முழுமையான விழப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், உலக பெருந்தொற்றாகக் காணப்படும் HIV தொற்றை ஒழிப்பதற்கான திட்டங்களை உலகத் தலைவர்கள் முழுமையாக முன்னெடுக்கும் பட்சத்தில், 2030 ஆம் ஆண்டில் எயிட்ஸை முழுமையாக ஒழிக்க முடியும் என  ஐக்கிய நாடுகளின் இணைந்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.