தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் இரண்டு உப குழுக்களை அமைக்க தீர்மானம்

by Bella Dalima 29-09-2022 | 7:58 PM

Colombo (News 1st) பொதுமக்கள் சபையொன்றை உருவாக்கி மக்களும் அரச நிர்வாகத்துடன் தொடர்புபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான யோசனை மக்களின் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில்,  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக அண்மையில் தேசிய சபை ஸ்தாபிக்கப்பட்டது.

தேசிய சபையின் முதலாவது கூட்டம்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்காக  இரண்டு உப குழுக்களை அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதவிகள் அடிப்படையில் தேசிய சபையில் அங்கம் வகிக்கும்,   பிரதமர் தினேஸ் குணவர்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், சிசிர ஜயக்கொடி, நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித்த அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேசிய சபையின் உறுப்பினர்களான C.V.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், A.L.M. அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 

தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் தேசிய சபையில் பங்கேற்கப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபைக்கும் தேசிய சபை பிரதிநிதித்துவத்திற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை.

 
 

ஏனைய செய்திகள்