தம்புத்தேகம கொள்ளை: பிரதேச சபை உறுப்பினர் கைது

தம்புத்தேகம வங்கி கொள்ளை: பிரதேச சபை உறுப்பினர் கைது

by Staff Writer 27-09-2022 | 9:40 AM

Colombo (News 1st) தம்புத்தேகம பகுதியில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட முற்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் நேற்று(26) வைப்பிலிடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தர்ப்பத்தில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் குறித்த தனியார் வங்கியில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. 

தம்புத்தேகம - கலுன்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 மற்றும் 50 வயதான இருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் வசமிருந்த துப்பாக்கி, 1 கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிளொன்று உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.