போராட்டத்தில் ஈடுபட்ட 84பேர் பொலிஸாரின் பொறுப்பில்

சோசலிச இளைஞர் அமைப்பு போராட்டம்; 84 பேரை பொறுப்பில் எடுத்த பொலிஸார்

by Bella Dalima 24-09-2022 | 8:49 PM

Colombo (News 1st) அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோசலிச இளைஞர் அமைப்பு இன்று (24) ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது, இரண்டு தேரர்கள் உள்ளிட்ட 84 பேரை தமது பொறுப்பில் எடுத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இவர்களில் நான்கு பெண்களும் அடங்குகின்றனர்.

போராட்டத்திற்கு '' புதிய சக்தி - இளைஞர் சக்தி மீண்டும் கொழும்பிற்கு' என்ற தொனிப்பொருளில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பேரணி ஆரம்பிக்கப்படவிருந்தது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு டீன்ஸ் வீதியூடாக  கொழும்பு கோட்டையை நோக்கி பயணிப்பதற்கு தயாராகினர். 

இந்நிலையில், சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். 

மீண்டும் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரு தொகுதி போராட்டக்காரர்களை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்தனர். 

சோசலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் எரங்க  குணசேகரவும் இன்று பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டார். 

இதேவேளை, காயமடைந்த சிலர்  தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.