2016 - 2021 காலப் பகுதியில் 455 ஊடகவியலாளர்கள் கொலை: UNESCO

by Bella Dalima 15-09-2022 | 5:26 PM

Colombo (News 1st) இன்று சர்வதேச ஜனநாயக தினம்.

ஜனநாயகத்திற்கான ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதே இந்த வருடத்தின் தொனிப்பொருளாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் உலக சனத்தொகையில் 85 வீதமானோர், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாக UNESCO குறிப்பிட்டுள்ளது. 

சர்வதேச அளவில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

சட்ட துஷ்பிரயோகம், இலத்திரனியல் பாதுகாப்பு உத்திகள், வெறுப்பூட்டும் பேச்சுகள்,  நாளாந்தம் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகள், உளவு பார்த்தல் மூலம் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக UNESCO சுட்டிக்காட்டியுள்ளது. 

UNESCO தரவுகளின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 455 ஊடகவியலாளர்கள் கடமையின் போது அல்லது கடமை நிமித்தம் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.