ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட தொடர்: சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி நாட்டை வந்தடைந்தது

by Staff Writer 13-09-2022 | 6:58 AM

Colombo (News 1st) 2022 ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி இன்று(13) அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

இதன்போது இலங்கை குழாமிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை அணி நேற்று முன்தினம்(11) 06 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் கிண்ணத்தை தனதாக்கியது.

இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணி, ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இம்முறை கிண்ணத்தை வென்றமை விசேட அம்சமாகும்.

ஆசியாவில் பலம் வாய்ந்த வலைப்பந்தாட்ட அணியாக ஆறாவது தடவையாகவும் திறமையை நிரூபித்த இலங்கை வீராங்கனைகள், அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற இலங்கை அணியை வரவேற்கும் நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் உறுப்பினர்கள், விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.