சமந்தா உள்ளிட்ட குழு நாட்டிலிருந்து புறப்பட்டது

சமந்தா பவர் உள்ளிட்ட குழு நாட்டிலிருந்து புறப்பட்டது

by Chandrasekaram Chandravadani 12-09-2022 | 2:57 PM

Colombo (News 1st) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர் உள்ளிட்ட குழு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இன்று(12) அதிகாலை 3.50 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதும் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான உறவை மேம்படுத்துவதும் சமந்தா பவரின் இந்த விஜயத்திற்கான நோக்கமாகும்.

நேற்று முன்தினம்(10) ஜாஎல - ஏக்கல பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றிற்கு சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடிய சமந்தா பவர், இந்நாட்டு விவசாயிகளின் தேவைக்காக 40 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று(11) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் சமந்தா பவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த போது சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.