சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்கும்: மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை

by Bella Dalima 02-09-2022 | 8:21 PM

Colombo (News 1st) அரசாங்கத்தை அமைக்க அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ள கட்சி என்ற வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் மற்றும் நிறைவு விழா இன்று மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது.

நேற்று மத்திய செயற்குழு கூட்டத்தில்  அனுமதி வழங்கிய கட்சியின் யாப்பு திருத்தத்திற்கு அகில இலங்கை செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.

சிரேஷ்ட உப தவிசாளர்கள் மற்றும் உப தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கட்சியின் கொள்கைக்கு  முரணாக ஒழுக்கத்தை மீறுவோரை கட்சியில் இருந்து நீக்குதல் தொடர்பிலான திருத்தமும் இதில் உள்ளடங்குகிறது.

'எதிர்பார்ப்பிற்கு உயிர் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில் கட்சியின் மாநாடு நடைபெற்றது.