புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி தோண்டியெடுப்பு

by Staff Writer 01-09-2022 | 9:32 AM

Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று நேற்று(31) மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் நேற்று(31) முன்னெடுக்கப்பட்டன.

16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெறுமையான எரிபொருள் தாங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 

2 மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.