Colombo (News 1st) முறைகேடாக இடம்பெறும் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் பொலிஸ்மா அதிபரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடைந்தமைக்கு அந்நிய செலாவணி பற்றாக்குறையே பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உண்டியல் போன்ற முறைகள் மூலம் சட்டரீதியான வங்கி முறைக்கு வெளியே பணப்பரிமாற்றம் செய்வதும் நெருக்கடிக்கான காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
வௌிநாட்டு பணியாளர்கள், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக முறைசாரா வழிமுறைகள் மூலம் வங்கி முறைக்கு வெளியே வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்வதும் இதற்கான மற்றுமொரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான வழிகளில் வெளிநாட்டுப் பணத்தை பெற்றுக்கொள்ளவும் செலுத்தவும் வேண்டாம் என பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.