சீன தூதுவருக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம்

இலங்கைக்கு ஆதரவே தேவை; அழுத்தங்கள் அல்ல: சீன தூதுவருக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம்

by Staff Writer 28-08-2022 | 4:27 PM

Colombo (News 1st) இலங்கைக்கான சீன தூதுவரின் கருத்துகளை தாம் கவனத்திற்கொண்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சீன தூதுவரின் கருத்துகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடுமையான தொனியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

 


 
சீன தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம். இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா அவ்வாறானதொன்றல்ல என்பதனை நாம் அவருக்கு உறுதிப்படுத்துகின்றோம். விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதென கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும். தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்டதுமான நிகழ்ச்சிநிரல்களே, குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன.  அத்துடன், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல.

என இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே, தாய்வான் நீரிணையின் இராணுவமயமாக்கல் மற்றும் சீனாவின் Yuan Wang 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி இலங்கைக்கான சீன தூதுவர் எழுதிய கட்டுரை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் மற்றுமொரு ட்விட்டர் பதிவினையும் வெளியிட்டுள்ளார்.