Colombo (News 1st) இலங்கையின் உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் 25 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த சவாலான காலத்தில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக நாட்டிற்கு உணவு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கலுக்கு அவுஸ்திரேலியா உதவ உள்ளது.
இந்த நடவடிக்கையானது, இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் இரு தரப்பு உறவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 75 ஆண்டு கால நட்பை வலுப்படுத்தும் என அவுஸ்திரேலியா நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் 23 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிக்கு மேலதிகமாக இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகிறது.