குற்றவாளி பட்டியலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்

200 கோடி பண மோசடி வழக்கில் குற்றவாளியாக ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயரும் இணைப்பு

by Bella Dalima 17-08-2022 | 7:30 PM

200 கோடி இந்திய ரூபா மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைக்கு நீதிமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், ஜாக்குலின் கைது செய்யப்படுவார் என  இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. 

டெல்லியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவியை மிரட்டி 215 கோடி இந்திய ரூபாவை பறித்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலதிபரின் மனைவியை மிரட்டிப் பறித்த பணத்தைக் கொண்டு தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார் சுகேஷ். 

இதன்போது, அவருக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு பரிசுகளை அவர் வழங்கியிருந்தமை விசாரணையில் தெரிய வந்தது. 
அதன் பிறகு அதிகாரிகள் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சுகேஷிடம் தான் பெற்ற பரிசுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். அதையடுத்து, ஜாக்குலினுக்கு சொந்தமான 7.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளார்கள். 

அதில், சுகேஷ் மட்டுமின்றி தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.