Colombo (News 1st) சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மாத்திரம் 17,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க குறிப்பிட்டார்.
பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.
நாளாந்தம் சுமார் 1600 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைவதாக தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.
கடந்த மே மாதம் நாளாந்தம் 650 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே நாட்டிற்கு வருகை தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க குறிப்பிட்டார்.