Yuan Wang 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசம்

by Staff Writer 16-08-2022 | 8:28 AM

Colombo (News 1st) சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங் 5 (Yuan Wang 5) ஆய்வு ,கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளது. 

இலங்கை  கடற்பரப்பான SEA OF SRILANKA பிராந்தியத்திற்குள் நேற்று(15) பிற்பகல் பிரவேசித்திருந்தது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று(16) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Yuan Wang 5 கப்பல் ஏற்கனவே 11ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கினாலும் இந்தியாவின் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை வௌிப்படுத்திய நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு வௌிவிவகார அமைச்சு சீனாவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது. 

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கான காரணத்தை வௌிவிவகார அமைச்சு பகிரங்கப்படுத்தவில்லை.