பல்கலைக்கழகங்களை மீள திறக்க எதிர்பார்ப்பு - UGC

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல்

by Staff Writer 16-08-2022 | 7:42 AM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து உப வேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

உப வேந்தர்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

மருத்துவ மற்றும் இணை சுகாதார பீடங்களின் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெறுவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

ஏனைய பீடங்களை சேர்ந்த சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலேயே தங்கியிருந்தும், மேலும் சிலர் வீடுகளுக்குச் சென்றும் கற்றல் செயற்பாடுகளை தொடர்வதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.