ஜனாதிபதியால் புதிய குழு நியமனம்

அரச நிறுவனங்களுக்கான தலைமை அதிகாரிகளை நியமிக்க ஜனாதிபதியால் குழு நியமனம்

by Staff Writer 16-08-2022 | 2:00 PM

Colombo (News 1st) அரச கூட்டுத்தாபனங்கள், சபைகளுக்கான பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்களை நியமிக்கும் போது, பூரண அனுமதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முழுமையான இணக்கப்பாடின்றி அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களை மாற்றுவதற்கு ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தல் மற்றும் முறையற்ற வகையில் நியமனங்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் ஆராய்ந்து இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலைவர்கள் அல்லது பணிப்பாளர் சபை மாற்றப்பட வேண்டுமாயின், அதற்கான நியாயபூர்வமான காரணங்களை குறித்த குழுவிடம் சமர்ப்பித்து பூரண அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, அமைச்சரவையின் செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.