.webp)
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
மசகு எண்ணெய்யை ஏற்றிய கப்பல் இன்று (13) நாட்டிற்கு வருகை தருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் வரிசைகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல் வழங்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிகக்குறைந்தளவான டீசலே விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இன்றும் (13) 80 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகை தந்த எரிவாயு கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் தொடர்வதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் கூறினார்.