விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள்

முல்லைத்தீவில் கைதான 9 மீனவர்களும் விளக்கமறியலில்!

by Rajalingam Thrisanno 12-08-2022 | 6:07 PM

முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை  எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரும் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நேற்று(11) மாலை ஒப்படைக்கப்பட்டனர்.

SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது நேற்றுமுன்தினம் (10) இந்திய மீனவர்கள் 09 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.