சீன கப்பல் தொடர்பில் கருத்துக் கூற மறுத்த இந்தியா

சீன கப்பல் தொடர்பில் கருத்துக் கூற மறுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயம்

by Bella Dalima 10-08-2022 | 8:45 PM

Colombo (News 1st) சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் Yuan Wang 5 தொடர்பில் பதிலளிப்பதை தவிர்த்துக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்த கப்பல் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போதே, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை கூறியது.

இலங்கைக்கு பயணிக்கும் கப்பலை தாமதப்படுத்துமாறு இலங்கை வௌிவிவகார அமைச்சு சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதற்கு எவ்வித காரணங்களையும் கூறியிருக்கவில்லை.

Yuan Wang 5 ஆய்வுக்கப்பல்  இன்று பிற்பகல் வேளையிலும் கடலில் பயணித்துக்கொண்டிருந்தது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து 600 கடல் மைல் வரை நேற்று இந்த கப்பல் நெருங்கியிருந்தது.

எனினும், நேற்று இரவு திடீரென இந்த கப்பல் வேகத்தைக் குறைத்து, அந்தமான் தீவு நோக்கி திசை திருப்பியமையை காண முடிந்தது.

இன்று அதிகாலை மீண்டும் திசையை மாற்றி  Yuan Wang 5 கப்பல் பயணிக்கிறது.