அடக்குமுறைகளுக்கு 13 மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

இலங்கையில் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் 13 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

by Bella Dalima 06-08-2022 | 3:25 PM

Colombo (News 1st) இலங்கையில் அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளையும் பழிவாங்கல்களையும் 13 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

ஆர்ப்பாட்டங்களை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள், அதிகாரிகளின் இலக்காக அமைந்தமை தொடர்பில் தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜூலை 22 ஆம் திகதி இலங்கை இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்வோரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை செய்து அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு, இனவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, இலங்கை தொடர்பிலான சர்வதேச செயற்பாட்டுக் குழு, சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட 13 மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கூட்டறிக்கையை வௌியிட்டுள்ளன.

கடந்த ஜூலை 22 ஆம் திகதி கொழும்பு போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை இந்த அமைப்புகள் கண்டித்துள்ளன.

கோட்டாகோகம போராட்டக்களத்தில் அமைதியான முறையில் போராடுவோரின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் பாதுகாப்பு தரப்பினரை தைரியப்படுத்துவதுடன், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையிலும் அடக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக 13 சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் கருத்து சுதந்திரமும் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டமையினாலேயே நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Signatories:

  • Amnesty International
  • Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA)
  • CIVICUS
  • FIDH-International Federation for Human Rights
  • Franciscans International
  • Front Line Defenders
  • Human Rights Watch
  • International Commission of Jurists
  • International Movement Against All Forms of Discrimination and Racism (IMADR)
  • International Service for Human Rights
  • Sri Lanka Campaign
  • The International Working Group on Sri Lanka
  • World Organisation Against Torture (OMCT)