.webp)
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையூடாக முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோக நடைமுறை முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில், பொதுமக்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை தொடர்ச்சியாக விநியோகிக்க நீண்ட கால மற்றும் குறுகிய கால செயற்றிட்டங்களை தயாரிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையின் போது உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட இந்த அறிவிப்பை விடுத்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகள் தற்போதும் அமுல்படுத்தப்படுவதாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதற்கான சத்தியக்கடதாசியும் தற்போது மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், இலங்கை போக்குவரத்து சபையூடாக முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோக செயற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா மற்றும் சுரேன் ஞானராஜ் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு, அரச மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தீர்வு காண்பதற்குரிய செயற்றிட்டம் அடங்கிய சத்தியக்கடதாசியை அடுத்த தவணை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.