இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்தியா தலையீடு?

ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது: உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு 

by Bella Dalima 20-07-2022 | 6:12 PM

Colombo (News 1st) ஜனநாயக நடைமுறைகள், விழுமியங்கள், அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக ஸ்திரத்தன்மையையும் பொருளாதார மீட்சியையும் அடைவதற்கான இலங்கை மக்களின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று பிற்பகல் அறிவித்தது.

இலங்கையின் நெருங்கிய நண்பர்,  அயல் நாடு என்ற ரீதியில் சக ஜனநாயக நாடு என்ற வகையில், இந்த ஆதரவை வழங்குவதாக உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பான சர்வகட்சி கலந்துரையாடல் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் நேற்று (19) பிற்பகல் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதில், அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியான அழுத்தம் விடுக்கப்பட்டதாக ஆதாரமற்றதும் ஊகங்களின் அடிப்படையிலும் தகவல்கள் வௌியாகி இருப்பதாகவும் அவை பொய் என திட்டவட்டமாக மறுப்பதாகவும்  உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

ஜனநாயக வழிமுறைகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் ஆகியவற்றுக்கு அமைவாக தமது அபிலாஷைகளை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் இன்னொரு நாட்டின் உள் விவகாரங்கள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.