by Staff Writer 19-07-2022 | 3:29 PM
Colombo (News 1st) பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதையும் பாராளுமன்றத்தில் வாக்களிப்பதையும் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன, ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.