புதிய ஜனாதிபதி ஜூலை 20  தெரிவு செய்யப்படுவார்

புதிய ஜனாதிபதி ஜூலை 20 ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார்: சபாநாயகர் அறிவிப்பு

by Staff Writer 15-07-2022 | 3:10 PM
Colombo (News 1st) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படுவார் என இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தலைமையில் முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரப்பட்டு , 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். ஜனநாயக கட்டமைப்பிற்குள் இந்த விடயங்களை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 1981 ஆம் ஆண்டு, இரண்டாம் இலக்க விசேட கட்டளைகள் சட்டத்தின் 04 ஆம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அந்த சட்டத்தின் 05 ஆவது சரத்திற்கு அமைய, ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் காணப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.