ராமர் பாலம் தொடர்பான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை

ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக்கக் கோரும் வழக்கு ஜூலை​ 26 ஆம் திகதி மீண்டும் விசாரணை

by Bella Dalima 14-07-2022 | 6:48 PM
Colombo (News 1st) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக அறிவிக்கக் கோரும் இந்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா, நீதிபதிகளான கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் விசாரிக்கவுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களைக் கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஸ்ரீ ராம்சேது எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 திட்டுக்கள் இந்தியாவிற்கும் உரித்துடையவையாகும். இதனிடையே, ராம் சேது எனப்படுகின்ற ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனம் செய்யுமாறு கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி 2007 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13) நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.