நடுக்கடலில் அனர்த்தத்தை எதிர்கொண்ட 55 பேர் மீட்பு 

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்று நடுக்கடலில் அனர்த்தத்தை எதிர்கொண்ட 55 பேர் கடற்படையினரால் மீட்பு 

by Bella Dalima 12-07-2022 | 4:10 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முயற்சித்த போது ஹம்பாந்தோட்டைக்கு தென்கிழக்கே சுமார் 390 கடல் மைல் (722 கிமீ) தொலைவில் கடும் காற்றில் சிக்கித் தவித்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்த 55 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. படகு தென்மேல் கடற்பரப்பில் அனர்த்தத்தை எதிர்கொண்ட நிலையில், இலங்கை கடற்படையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தினூடாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தலில் ஈடுபட்ட 05 பேருடன் 46 ஆண்களும் 3 பெண்களும் 6 சிறார்களும் அடங்கலாக 55 பேர் குறித்த படகில் பயணித்ததாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். பலத்த காற்றினால் இவர்கள் பயணித்த படகு சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்தமையால், அதனை கரைக்கு எடுத்து வர முடியாது போயுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தை சேர்ந்தவர்களே கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.