காரைநகர் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 06 பேருக்கு விளக்கமறியல்

by Staff Writer 12-07-2022 | 3:53 PM
Colombo (News 1st) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ். காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 06 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 06 பேரும் இழுவைப்படகுடன் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் இன்று காலை மயிலிட்டி மீன்பிடித்துறை முகாமிலிருந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். நீரியல் வளத்துறை அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், ஊற்காவற்றுறை நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.