''ஜனாதிபதி தெரிவு தொடர்பாகவே இன்றைய கூட்டம்''

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாகவே இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது - சபாநாயகர்

by Staff Writer 11-07-2022 | 6:46 PM
Colombo (News 1st) இன்றைய(11) கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிக்கையொன்றை விடுத்துள்ளார். ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளமையால் விரைவில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இன்றைய(11) கூட்டம் நடைபெற்றதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் நாற்பதாவது சரத்து மற்றும் 1981ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் குறுகிய காலத்தில் இந்த நடவடிக்கை இடம்பெற வேண்டுமென கட்சித் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தியதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவித்து, 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்புமனு கோருவதற்கும் 20ஆம் திகதி புதன்கிழமை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தி புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனாதிபதியின் கீழ் சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அரசியலமைப்பு சார்ந்த எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நாட்டில் தற்போதுள்ள அத்தியாவசிய ​சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாளைய தினத்திலேனும் சர்வகட்சி அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படுமேயானால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக தயார் என ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததாக சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.