by Bella Dalima 10-07-2022 | 7:10 PM
Colombo (News 1st) ஊடக ஒடுக்குமுறை சர்வாதிகாரத்தின் மற்றுமொரு வடிவம் என யாழ். ஊடக மன்றம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய பொலிஸார், பொலிஸ் அதிரடிப் படையினர், அதற்கு கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஊடக மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளதை உள்ளவாறு எடுத்துச்சொல்லும் ஊடகங்களை கண்மூடித்தனமாக தாக்குகின்ற அரசின் செயற்பாடு, அதிலும் குறிப்பாக பொலிஸாரின் நிகழ்வுகளைக் கூட செய்தியாக வழங்குகின்ற ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக யாழ். ஊடக மன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போராட்டங்களின் போது ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியவர்களே, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையானது ஊடகத்துறையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் ஊடகவியலாளர்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை வௌிப்படுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் மோசமாக மீறப்பட்டு வருகின்றது என்பதை கொழும்பில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளதாக வவுனியா ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என்பதை வௌிப்படுத்திய பின்னரும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் காட்சிகள் வௌியாகியுள்ளதாக வவுனியா ஊடக அமையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஊடகவியலாளர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து அம்பலாந்தோட்டை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தேரர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து மாத்தறை - வெலிகமவிலும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கண்டி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினரும் கண்டி நகரில் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.