ஜூலை 12 ஆம் திகதி முதல் மீண்டும் எரிவாயு விநியோகம்

எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது: ஜூலை 12 ஆம் திகதி முதல் மீண்டும் எரிவாயு விநியோகம்

by Bella Dalima 10-07-2022 | 3:59 PM
Colombo (News 1st) 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (10) நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பல் இன்று மாலை கெரவலப்பிட்டியவை சென்றடைந்தவுடன், எரிவாயுவை இறக்கும் பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளைய தினம் 3,740 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் வருகை தரவுள்ளது. அத்துடன் 3,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 12 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் வீடுகளுக்கான எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் கூறியுள்ளார்.